Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: தமிழகத்தில் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குபருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துவருகிறது. அந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று மதியம் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று அல்லது நாளை மேற்கு திசையில் நகர்ந்து , தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாளை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிகவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், 14ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 15ம் தேதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை 95 டிகிரியாக இருக்கும். இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார்வளைகுடா, மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதியில் இன்றும் நாளையும், சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

* தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கி உள்ளது.

* கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துவருகிறது.

* வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.

* தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.