Tuesday, November 28, 2023
Home » மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்: 9 ஆண்டு கால மோடி அரசு பெண்கள் நலனை சீரழித்தது; திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்: 9 ஆண்டு கால மோடி அரசு பெண்கள் நலனை சீரழித்தது; திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு

by Karthik Yash

சென்னை: கடந்த 9 ஆண்டு மோடி ஆட்சியில் பெண்களுக்கான சமத்துவம் அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும் என்று சோனியா காந்தி பேசினார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். கனிமொழி முன்னிலை வகித்தார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் உணவுத்துறை அமைச்சர் லெஷி சிங், மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, ஆம் ஆத்மி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: மாபெரும் தலைவரான கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி பெண்கள் மாநாட்டை நடத்தி அதில் கலந்துகொள்ள என்னை அழைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனது வாழ்க்கை முழுவதும் ஏழை மக்களுக்காக உழைத்தவரும் இந்திய மக்களின் தவப் புதல்வரான கலைஞர் ஒரு பன்முகத் தன்மை கொண்டவர். ஒரு எழுத்தாளராக, தலைவராக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். மாநில மொழி, சாதி, மத நம்பிக்கை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு எல்லோரையும் சமத்துவமாக கருதினார். தன்னுடைய வாழ்வில் பாலின சமத்துவத்தை முக்கிய கொள்கையாக கருதி இன்று தேசிய தலைவராக பரிணமித்து வருகிறார்.

நம்முடைய பெண்கள் இந்தியாவிலேயே மிக மகத்தான சாதனைகளை செய்துள்ளார்கள். மரபு வழி சமூகம், கலாச்சார சமூகம் ஆகியவற்றை எதிர்த்து நீண்ட நெடிய போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பெண்கள் விஞ்ஞானத்திலே, விளையாட்டிலே, குடும்பத்திலே முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு கலைஞரின் பங்கு மிக முக்கியமானது. அதே நேரத்தில் இப்போதுவரை பெண்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. பல தடைகளை தாண்டியே இந்த சமத்துவத்தை அடைந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி பாலின சமத்துவத்திற்காக போராடி உள்ளார். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோர் பெண்கள் சமத்துவத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.

கடந்த 1928ல் மோதிலால் நேரு தலைமையில் அரசியல் சாசனம் தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு கராச்சியில் நடந்த மாநாட்டில் பெண்களுக்கு சமத்துவம், பொருளாதாரம், அரசியலில் சமமான பங்கு தர ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள்தான் அம்பேத்கர் தலைமையில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டபோது பெண்களுக்கு பாலின சமத்துவம், சமூக சமத்துவம் ஆகியவை முன்னெடுக்கப்பட்டு அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நமது முதல் பிரதமர் நேரு கூறும்போது, ஒரு ஆண் மகனை படிக்க வைத்தால் ஒரு குடும்பத்தை படிக்கவைத்தது போலாகும். அதே நேரத்தில் ஒரு பெண்ணை படிக்க வைத்தால் சமுதாயத்தையே படிக்க வைத்தது போலாகும் என்றார்.

இந்தியாவில் பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். ஒரு பெண் எப்படி தலைவராக, வழிகாட்டியாக, நிர்வாகியாக செயல்பட வேண்டும் என்பதற்கு இந்திரா காந்தி மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். ஏழை, எளிய மக்களை எப்படி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ராஜிவ் காந்தி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உள்ளாட்சிகளில் கொண்டுவருவதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

அது ஒரு சமூக புரட்சியாகும். இன்று பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அதாவது 3ல் ஒரு பங்கு ஒதுக்கீடு என்பதை தமிழ்நாடு மிக சிறப்பாக செயல்படுத்தியிருப்பது பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியில் முன்வந்தபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதே இடஒதுக்கீடு இப்போது கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடஒதுக்கீடு சட்டம் ஒரு ஆண்டில் அமலுக்கு வருமா, அல்லது இரண்டு, மூன்று ஆண்டுகளில் அமலுக்கு வருமா என்று தெரியாது. இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு நாங்கள் கொடுத்த அழுத்தம்தான் காரணம்.

எனவே, பெண்களுக்கான இட ஒதுக்கீடு கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டு தலைவர்களாகவும், முதல்வர்களாகவும் இருந்த அண்ணா, கலைஞர் ஆகியோர் பெண்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாக இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்ததால்தான் இன்று மகளிர் உரிமை, பாலின சமத்துவத்தில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது. ஐந்து முறை முதல்வராக பொறுப்பேற்றிருந்த கலைஞர் பெண்களுக்கு காவல்துறையில் பெரும் பங்கேற்பை ஏற்படுத்தி தந்தவர்.

தமிழ்நாட்டில் உள்ள காவலர்களில் 4ல் ஒரு பங்கினர் பெண்களாக உள்ளனர். அடுத்து முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் அரசு பணிகளில் பெண்கள் 40 சதவீதம் உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாலின சமத்துவம், பெண்களுக்கான முன்னேற்ற திட்டங்கள், பெண்களுக்கான மருத்துவ திட்டங்கள் என பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

தமிழ்நாடு சுகாதார, மருத்துவ திட்டத்தால்தான் தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நடவடிக்கைகளால் நாம் செயல்படுத்திய நல்ல திட்டங்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. பெண்களை அடையாள சின்னங்களாக மாற்றி, அவர்களை ஏற்கனவே உள்ள பாரம்பரியத்தை பின்பற்ற சொல்வது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 9 ஆண்டுகளில் பெண்களின் நலன் அனைத்தும் சீரழிக்கப்பட்டுள்ளது. நமது இந்தியா கூட்டணி பெண்களின் உண்மையான சமத்துவத்தை நிச்சயம் கொடுக்கும். இந்தியா கூட்டணி பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நிச்சயம் அமல்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?