சென்னை: மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க வரும் சோனியா காந்திக்கு எழுச்சிமிக்க வரவேற்பை அளிக்க வேண்டும் என தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஆணாதிக்க சமுதாயத்தில் 25 ஆண்டு அரசியல் பயணம் மேற்கொண்டு மகத்தான சாதனைகளை படைத்த சோனியா காந்தி நாளை மாலை நடைபெற இருக்கிற தி.மு.க.வின் மகளிர் உரிமை மாநாட்டில் பேருரையாற்ற அழைக்கப்பட்டதையொட்டி இன்று இரவு சென்னை வருகிறார். மேலும், அவருடன் பிரியங்கா காந்தியும் வருகை தரவுள்ளார்.
இதன்மூலம் மகளிர் மாநாடு மிகப்பெரிய எழுச்சியோடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலை நடைபெற உள்ளது. அதன்படி, ராஜிவ்காந்தியின் மறைவிற்கு பிறகு அரசியலை முற்றும் துறந்திருந்த சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியை காப்பாற்றுவதற்கு தலைமையேற்க வருக வேண்டும் என மூத்த தலைவர்கள் அழைத்ததை ஏற்று தலைமைப்பொறுபுக்கு வந்து 19 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி சாதனைகளை புரிந்தவர்.
அதேபோல், 6 ஆண்டுகால வாஜ்பாய் ஆட்சியை அகற்றுவதற்கு திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்தவர். மீண்டும் 2009 தேர்தலில் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்தவர். மன்மோகன்சிங் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். மேலும், மகளிர் மசோதா நிறைவேற ஆட்சியை பணயம் வைத்து துணிச்சலான முடிவு எடுத்தவர்.
அன்றைய நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியின் இறுதியில் இருக்கிற பா.ஜ.க. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது. பா.ஜ நிறைவேற்றியிருக்கிற மசோதா ராகுல்காந்தி கூறியபடி நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகளாகும். இதுதான் பா.ஜ மகளிரை ஏமாற்றுகிற அரசியலுக்கு உரிய சான்றாகும். எனவே, மகளிர் மாநாட்டில் பங்கேற்க வரும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை அண்ணா சாலையின் இருபுறங்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை சார்ந்தவர்கள் பெரும் எழுச்சியோடு, திரளாக பங்கேற்று எழுச்சிமிக்க வரவேற்பை நன்றிப் பெருக்கோடு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.