Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை:வாலிபர் தற்கொலை முயற்சி

திருமலை: வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை கழுத்தறுத்து கொலை செய்த காதலன் தானும் தற்கொலைக்கு முயன்றார்.ஆந்திர மாநிலம், ஏளூரு சத்திரம்பாடு எம்.ஆர்.சி.காலனியை சேர்ந்தவர் ரத்னகிரேஸ்(27). அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும் முசனூரை சேர்ந்த ஏசுரத்தினம் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதற்கிடையில் ஏசுரத்தினம் காதலை மறக்க முடியாமல் வேதனைப்பட்டார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலி ரத்னகிரேசிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் அவர் இதை ஏற்கவில்லை. இதனால் ஏசுரத்தினம், காதலியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். ஆனால் தங்கள் மகள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ய முடியாது எனக்கூறினர்.இந்நிலையில் நேற்று மதியம் ரத்னகிரேஸ் சத்திரம்பாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து வழிமறித்த ஏசுரத்தினம், மீண்டும் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அப்போதும் ரத்னகிரேஸ் மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே நடுரோட்டிலேயே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஏசுரத்தினம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்னகிரேஸின் கழுத்தை அறுத்தாராம். இதில் ரத்னகிரேஸ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து ஏசுரத்தினமும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஏசுரத்தினத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரத்னகிரேஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஏளூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ஏளூரு மூன்றாவது நகர போலீசில் ரத்னகிரேசின் பெற்றோர் அளித்த புகாரில், ‘ஏசுரத்தினம் எங்களது மகளை 10ம்வகுப்பில் இருந்தே காதல் என்ற பெயரில் துன்புறுத்தி வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரத்னகிரேசுக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனை அறிந்த ஏசுரத்தினம் எங்களது மகளை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்’ என தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.