சென்னை: அண்மையில் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய திமுக மூத்த முன்னோடியும், முன்னாள் எம்எல்ஏவுமான சோ.மா.ராமச்சந்திரனை நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: கொள்கை நெறி தவறாத பாதையில், கடும் உழைப்பால் முன்னேறியவரும்- முன்னாள் எம்எல்ஏவும் நூறாண்டு கடந்து கழகத்தின் மூத்த முன்னோடியாக நமக்கெல்லாம் திசைகாட்டியாக வாழ்பவருமான சோ.மா. ராமச்சந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்தினோம். திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி பகுதியில் பிறந்து, பின்னர் சென்னையில் குடியேறி, தேநீர் கடை ஒன்றை நடத்தி, தனது உழைப்பால் உயர்ந்த அவர், திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் இணைந்து பணியாற்றியவர்.
மிசாவில் சிறை கண்டவர். 30 ஆண்டுகாலம் பகுதி செயலாளர், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் தொண்டாற்றி அண்ணா நகர் வாழும் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அண்ணா, கலைஞர் ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். கலைஞர்-பேராசிரியர் ஆகியோர் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டபோது, அவர்களது வெற்றிக்காக களப்பணியாற்றியவர். முன்னத்தி ஏராக கழகத்தினருக்கு வழிகாட்டும் சோ.மா.ராமச்சந்திரன் நீடுடி வாழ்க பல்லாண்டு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.