காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.
பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டு சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண் டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றிவருபவராகவும் இருத்தல்வேண்டும்.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல்வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.6.2025க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பித்து மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல்தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.