திருவள்ளூர்: திருமணம் செய்துகொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி பலமுறை ஜாலியாக இருந்த பிரபல யூ டியூபர் கைது செய்யப்பட்டார். சமூகவலைதளத்தில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால் இந்த பாதிப்பில் சிக்கியுள்ளார். திருவள்ளூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண், தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ‘’தமிழ் உங்களில் ஒருவன்’’ என்ற யூ டியூப் சேனலை பார்த்து அதை நடத்திவரும் தமிழழகன் என்பவருடன் பழகியதாக தெரிகிறது. ஆரம்பத்தில் நண்பர்களாக பேசிய இவர்கள், காதலிக்க துவங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 2 வருடங்களாக தமிழழகனும் அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். இதை பயன்படுத்தி திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பலமுறை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.இந்த நிலையில், தங்களது விவகாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்துவிட்டது. எனவே கொஞ்ச நாட்கள் இருவரும் பேசாமல் இருப்பதுபோல் நடிப்போம்’ என்று தமிழழகன் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் அவ்வாறு நடந்துள்ளார். இதனிடையே தமிழழகன் சொல்வது பொய் என்று தெரிந்ததும் அந்த பெண் தமிழழகனிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டபோது உடனே சரி என்று தெரிவித்து மீண்டும் அந்த பெண்ணை அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதன்பிறகு தமிழழகன், ‘’இனி தான் சொல்லும் வரை தனக்கு வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். அதற்கு தமிழ்ழகன்,’’ உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது’’ என்று திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டார்.
இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட இளம்பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த யூடியூபர் தமிழழகனை கைது செய்து விசாரித்தனர். இதில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.