கொடைக்கானல்: கொடைக்கானலில் மழைக்கு பின் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளித்த நட்சத்திர ஏரியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு வேளையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பல்வேறு பகுதிகளில் பெய்தது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ரம்யமாக காட்சியளித்தது. குறிப்பாக நட்சத்திர ஏரி முழுவதும் பனி படர்ந்து காணப்பட்டது. சூரிய ஒளி பட்டதும் நட்சத்திர ஏரியில் படர்ந்திருந்த பனியானது ஆவியாகி சென்ற காட்சி காண்போரின் கண்களை கவர்ந்து இழுத்தது. மேலும் இந்த அற்புத காட்சியை அதிகாலையில் நட்சத்திர ஏரியை சுற்றி நடைப்பயிற்சி சென்றவர்களும், இந்த பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகளும் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.