* ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.
* மட்டன் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால், ஆட்டுக்குடல் சீக்கிரம் வெந்துவிடும்.
* பீன்ஸ், முட்டைக்கோஸ், கூட்டு செய்யும் போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
* குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால் பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும். சர்பத்திலும் நன்னாரிக்கு பதில் ஜீரா கலந்து சாப்பிடலாம்.
* பாசிப் பயறு, கொண்டைக் கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
* புளிசாதம், எலுமிச்சைச் சாதம் போன்றவற்றுக்கு நிலக்கடலை வறுத்துப் போடாமல், எண்ணெயில் பொரித்து போட்டால் மொறு மொறுவென இருக்கும்.
* சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது அதில் விளக்கெண்ணெய் சேர்த்தால் பருப்பு நன்கு குழைந்து வரும். வாசனையும் நன்றாக இருக்கும்.
* பஜ்ஜிமாவில் சிறிது இட்லிமாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* முட்டை ஆம்லெட் செய்யும்போது காரம் சாப்பிடாதவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து குடை மிளகாயை சேர்த்தால் சுவை கூடுதலாகும்.
* புளிச் சோறு, ரசம், வெந்தயக் குழம்பு போன்ற புளி சம்பந்தப்பட்ட உணவு தயார் செய்யும்போது அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.
* பனீர் பட்டர் மசாலா செய்யும் போது, இஞ்சி, வெங்காயம் விழுதை நன்றாக கிளறியதும் முந்திரி, கசகசா, தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்த விழுதை கலந்து செய்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
* ஃபிரிட்ஜில் உள்ள ஐஸ் கியூப் டிரேயில் ஏதாவதொரு பழச் சாறை ஊற்றி கட்டியானவுடன் குழந்தைகளுக்கு ஜூசுடன் கலந்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
– அ.ப.ஜெயபால்
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
182