Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளா்களில் பெரும்பாலானோருக்கு உடனடியாக நிதியுதவி வழங்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் 5,264 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டதையும், அவா்களில் 1,101 பேருக்கு மட்டுமே உடனடியாக நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதையும் மனுதாரர் குறிப்பிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், கொத்தடிமைகளாக இவ்வளவு போ் இருந்தது அச்சமூட்டுவதாக கூறினார். மேலும் சில நேரங்களில் அண்டை மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறாா், அங்கு கொத்தடிமைகளாகப் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனா் என்றும் வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், " இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தீா்வு காண வேண்டும். எனவே அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழிலாளா் துறைச் செயலா்களுடன் ஒன்றிய தொழிலாளா் துறைச் செயலா் கூட்டம் நடத்தி, வெவ்வேறு மாநிலங்களுக்கு சிறாா்கள் உள்ளிட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளா்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்க எளிமையான நடைமுறை அந்த திட்டத்தில் இடம்பெற வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்துகளையும் ஒன்றிய அரசு பெற வேண்டும்’ என்று தெரிவித்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.