ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், அண்ணா அரசு மருத்துவமனையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். அப்போது, மக்களை தேடி மருத்துவ முறைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்குள்ள ரத்த சுத்திகரிப்பு மைய பகுதியை பார்வையிட்டு, நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பின்னர், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர், அரசு மருத்துவமனையில் 700 பேர் புற நோயாளிகளாகவும், 60க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்குவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூர், அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 50 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கூடிய விரைவில் கட்டப்பட உள்ளது. மேலும், சிறுநீரக செயல் இழப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, கூடுதலாக ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஏற்படுத்த உள்ளது’ என்றார். ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய ஊரக நல்வாழ்வு திட்ட இயக்குனர் சில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், கலெக்டர் கலைச்செல்வி மோகன், பயிற்சி கலெக்டர் சங்கீதா, ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.