சென்னை: சென்னையில் இருந்து குடும்பத்துடன் சிங்கப்பூர் சுற்றுலா செல்ல வந்த அமெரிக்க கல்லூரி மாணவன் சூட்கேசில் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சின்மயா நகரில் வசிப்பவர் கிஷோர். இவர் மனைவி, மகனுடன் அமெரிக்க குடியுரிமை பெற்று, அந்நாட்டில் வசிக்கிறார். கிஷோரின் மகன் கவுரி (20), அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்துடன், சென்னை சின்மயா நகரில் வசிக்கும் தனது தாயை பார்க்க, 10 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிஷோர், அவரது மனைவி, மகன், தாய் ஆகியோருடன் இரவு 11.30 மணி விமானத்தில், சிங்கப்பூருக்கு செல்ல, விமான நிலையத்துக்கு வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வழக்கம்போல பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அந்த வகையில், கிஷோர் குடும்பத்தினர் உடமைகளையும் ஸ்கேன் செய்தனர். அப்போது கிஷோரின் மகன் கவுரி சூட்கேசில், அபாயகரமான பொருள் இருப்பதற்கான சைரன் ஒலித்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், கவுரியின் சூட்கேசை தனியே எடுத்து சோதனையிட்டனர். அதில், துப்பாக்கி குண்டு ஒன்று கிடந்தது. இதையடுத்து துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர். அதோடு மாணவன் கவுரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது கவுரி, தான் அமெரிக்காவில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வருவதாகவும், அதற்காக லைசென்ஸ் எடுத்து, துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதாகவும், அதில் பயன்படுத்த வைத்திருந்த குண்டுகளில் ஒன்று, தவறுதலாக இந்த சூட்கேசில் இருந்திருக்கிறது.
மேலும் 10 நாட்களுக்கு முன்பாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த போது, இந்த சூட்கேஸ் தான் எடுத்து வந்தோம். யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் கவுரியின் விளக்கத்தை நிராகரித்தனர். அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். இதையடுத்து கிஷோர் தனது குடும்பத்தினர் அனைவரின் சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்து விட்டார். பின்பு கவுரியையும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டையும், பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய போலீசில் நேற்று ஒப்படைத்தனர். இச்சம்பவம் விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.