சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி, பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்பேருந்தில் 2 பயணிகளிடம் உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல் ரூ.1.10 கோடி மதிப்பில் 68 கிலோ எடையிலான வெள்ளி நகைகள் சூட்கேஸ் பெட்டியில் வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.
அவர்கள் திருமுல்லைவாயலைச் சேர்ந்த யோகேஷ் (32), சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரதீப் (18) என்பது தெரியவந்தது. வெள்ளி நகைகளை கடத்தி வந்தார்களா என தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி நகைகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிடிபட்ட 2 பேரிடமும் வணிகவரி துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.