Saturday, July 19, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் வெளிநாடுகளுக்கு பறக்கும் இளம்பிள்ளை பட்டுப்புடவைகள்!

வெளிநாடுகளுக்கு பறக்கும் இளம்பிள்ளை பட்டுப்புடவைகள்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

சேலத்தின் முக்கிய அடையாளம் மாம்பழம். ஆனால் சேலத்தின் மற்றொரு முக்கியமான அடையாளம் அங்கு நெய்யப்படும் சேலைகள். SALEM என்ற ஊரின் பெயரிலேயே சில்க், அலுமினியம், லித்தியம், எலக்ட்ரிசிட்டி, மாம்பழம் அடங்கி உள்ளது. இதில் முதல் வார்த்தையான S குறிப்பது சில்க் புடவையைதான். காரணம், சேலத்தில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, சித்தர் கோவில், தாரமங்கலம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல பகுதியில் இன்றும் பட்டுப்புடவையினை நெய்யும் தறி சத்தத்தினை கேட்க முடியும். அதில் இளம்பிள்ளையில் தயாரிக்கப்படும் பட்டுச்சேலைகளுக்கு தனி மதிப்புள்ளது. அந்த ரகப் புடவைகளை தயாரித்து வரும் செளதமி அமெரிக்கா, இலங்கை என வெளிநாட்டுக்குப் புடவைகளை நெய்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘சேலத்தில் உள்ள மேட்டூர்தான் என்னுடைய சொந்த ஊர். அங்குதான் கல்லூரி படிப்பினை முடிச்சேன். அதன் பிறகு நான் படித்த கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தேன். பேராசிரியராக வேலைப் பார்த்து வந்தாலும், சொந்தமா தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் கல்லூரிப் படிப்பு முடித்த உடனே எனக்கு திருமணமானது. இளம்பிள்ளைக்கு குடிபெயர்ந்தோம். குடும்பம், குழந்தை என என் குடும்ப வாழ்க்கை பரபரப்பாக கழிந்தது. என் மாமனார், மாமியார் இருவரும் இளம்பிள்ளையில் தறி வைத்து இயக்கிக் கொண்டிருந்தனர். வீட்டில் இருக்கும் போது நானும் அவர்களிடம் தறியினை எப்படி இயக்குவது என்று கற்றுக்கொண்டேன்.

ெகாஞ்சம் கொஞ்சமாக அதன் இயக்கத்தை தெரிந்து கொண்டு பிறகு முழு சேலையினை தறியில் எவ்வாறு உருவாக்குவது என கற்றுக்கொண்டேன். இளம்பிள்ளையை பொறுத்தவரைக்கும் பட்டு முதல் காட்டன், சுங்குடி சேலை என எல்லா வகை சேலையும் கிடைக்கும். இந்த மூன்று வகை சேலைகளையும் எங்க வீட்டு தறி மூலம் நாங்களே நெய்து தந்திருக்கோம். இதற்கான நூல் அனைத்தும் சூரத், பெங்களூரில் இருந்து மொத்த விலையில் வாங்கிடுவோம். நூலில் சேர்க்கப்படும் நிறமும், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்காத, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலர் பொடியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். மேலும் நம்ம ஊர்ல உற்பத்தியாகும் முழு பட்டுக்கூட்டினை பெங்களூரில் உள்ள வியாபாரிகள் பட்டு நூலாக மாற்றி எங்களுக்கு விற்பனைக்கு கொடுக்கிறாங்க.

முகூர்த்த நாட்களில் பட்டு சேலைக்கான ஆர்டர்கள் நிறைய வரும். ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, குழந்தைகள் என எல்லோரும் ஒரே நிறத்தில் பட்டாடைகள் கேட்பாங்க. அதை தயாரித்து தருகிறோம். சிலர் பருத்தியிலும் கேட்பாங்க. திருமண நாட்கள் மட்டுமில்லாமல் பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, ஆடி, பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற தினங்களிலும் ஆர்டரின் பேரில் புடவையை நெய்து தருகிறோம்.

தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாமல் சேலத்தில் உள்ள புடவை கடைகளுக்கும் நாங்க நெய்யும் புடவைகளை நேரடியாக விற்பனை செய்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் புடவைக்கு அதே நிற பிளவுஸ்களை விரும்புவதில்லை. கான்ட்ராஸ்ட் நிற பிளவுசினைதான் அணிகிறார்கள். அதனால் எங்க சேலைகளின் நிறத்திற்கு ஏற்ற கான்ட்ராஸ்ட் நிற பிளவுஸ்களையும் புடவைக்கு ஏற்ப தயாரிக்கிறோம்’’ என்றவர் கடைகள் மட்டுமில்லாமல் சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் தாங்கள் தயாரிக்கும் புடவையினை விற்பனை செய்து வருகிறார்.

‘‘சமூகவலைத்தளம் மூலமாகவும் பிசினஸ் செய்யலாம் என்பதை கொரோனா காலக்கட்டம்தான் எனக்கு உணர்த்தியது. அந்த சமயத்தில் கொரோனா குறித்த செய்திகளை படிப்பவர் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான புடவைகளை கட்டிக் கொண்டு வருவார். பலர் அவரின் உடையைப் பற்றி பேச நான் கேள்விப்பட்டு இருக்கேன். நாம் உடுத்தும் உடை நம்மை மற்றவர்களிடம் இருந்து எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.

அது என்னுடைய பிசினசிற்கு மிகவும் உதவியாக இருந்தது. அதற்கு ஏற்ப என்னுடைய புடவையிலும் நான் பலவித டிசைன்களை புகுத்தி வருகிறேன். இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, இலங்கை, லண்டன் போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டரின் பேரில் புடவை மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான பட்டுப் பாவாடை சட்டையும் தறியில் நெய்து கொடுத்து வருகிறோம். மழை, வெயில், குளிர் என மூன்று சீதோஷ்ண காலத்தில் கட்டக்கூடிய காட்டன் புடவைகளும் எங்களிடம் ஸ்பெஷல். சேலைகளுக்கு புதிய டிசைன்களை உருவாக்க தனிப்பட்ட குழு ஒன்று எங்களிடம் செயல்பட்டு வருகிறது. தரமான பொருட்களை நியாயமான விலையில் கொடுத்தால் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை’’ என்று புன்னகையுடன் சொல்கிறார் செளதமி.

தொகுப்பு: மோகனப்பிரியா ராமமூர்த்தி

படங்கள்: ஜெகன்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi