சிக்கிம்: சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 1,100 சுற்றுலா பயணிகள் தவிக்கும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. சிக்கிம் மாநிலத்தின் வட சிக்கிம் பகுதியில் நேற்று பெய்த கனமழை மற்றும் கடுமையான நிலச்சரிவுகளால் முக்கிய சாலைகள், பாதைகள் சரிந்தும் இடிந்தும் காணப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் 1,100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சுங்க்தாங், லாசென், லாசுங் பகுதிகளில் இருக்கும் சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் 200க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
இதுவரை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 1,100 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். மாநில அரசு, ராணுவம், உள்ளூர் நிர்வாகம் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றன. மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக சிக்கிம் நகர பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கான புதிய பயண அனுமதிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு முழுமையாக சீராகும் வரை சுற்றுலா பயணங்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.