மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், முருகன் கோயில்களுக்கு செல்ல வசதியாக வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலை முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதுமே, வாகன போக்குவரத்து காணப்படும் இச்சாலை பரபரப்பாகவே காணப்படும். மேலும், சென்னையில் இருந்து திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், திருப்போரூர் முருகன் கோயில்களுக்கு இசிஆர் சாலை வழியாக வருபவர்களும், தென் மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி வழியாக வருபவர்களும் மேற்கண்ட கோயில்களுக்கு செல்ல இசிஆர் சாலையில் வழிகாட்டி பெயர் பலகைகள் இல்லை.
இதனால், வாகன ஓட்டிகள் எந்தப் பக்கம் திரும்புவது என்பது தெரியாமல் குழப்பமடைகின்றனர். மேலும், அவர்கள் வழிதெரியாமல் வெவ்வேறு ஊர்களுக்கு வழிமாறி செல்கின்றனர். இதனால், மேற்கண்ட கோயில்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல மாதங்களாக பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நேற்று இசிஆர் சாலையில் பேரூர் சந்திப்பில் திருப்போரூர் முருகர் கோயில் செல்வதற்கும், புதிய கல்பாக்கம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் செல்வதற்கும் வழிகாட்டி பெயர் பலகைகளை அமைத்தனர். இதனால், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.