எஸ்ஐயுடன் சேர்ந்து காதலி வீடியோ காலில் மிரட்டல் குவைத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை: மயிலாடுதுறை எஸ்பியிடம் உறவினர்கள் புகார்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் மணவாளன். இவரது ஒரே மகன் சரத்குமார்(32). குவைத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் வைத்தீஸ்வரன் கோயில் அருகே திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரத்குமார் அவ்வப்போது பணம் அனுப்பி இளம்பெண்ணுக்கு 15 பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரூ. 2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் காதலித்த பெண்ணின் இருசக்கர வாகனம் காணாமல் போனது. புகார் அளிப்பதற்காக வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்திற்கு இளம்பெண் சென்றபோது, அங்குள்ள எஸ்ஐ ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நெருக்கம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணும் எஸ்ஐயும் குவைத்தில் உள்ள சரத்குமாருக்கு வீடியோ கால் செய்து நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம், எங்கள் விஷயத்தில் தலையிடாதே என்று கூறினர். எஸ்ஐ சரத்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சரத்குமார் அவரது குடும்பத்தினரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு காதலி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், எஸ்ஐ மிரட்டுவதாகவும், தான் உயிர் வாழ விரும்பவில்லை என்றும் கூறிவிட்டு வைத்துள்ளார். இதுபற்றி குவைத்தில் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்தபோது, சரத்குமார் தங்கி இருந்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிந்தது. அவர்கள் சரத்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று சென்று மகனை மிரட்டிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். மேலும் சரத்குமாரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


