பெரம்பூர்: ஷூ வாங்கி கொடுக்காததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை திருவிக. நகர் வெற்றி நகர் அண்ணல் காந்தி 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி இவரது மூத்த மகள் ஜோஸ்னா (17). இவர் தனியார் கல்லூரியில் முதல் வருடம் பிகாம் படித்து வந்தார். 2வது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கல்லூரிக்கு செல்வதற்கு புதிய ஷூ வேண்டும் என்று ஜோஸ்னா, தந்தையிடம் ேகட்டபோது, “இப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ளாய் பொறுமையாக இரு, இன்னும் சில நாட்கள் கழித்து வாங்கித் தருகிறேன்’ என்று கூறியதாக தெரிகிறது. நேற்றிரவு விநாயகமூர்த்தி, மனைவி இருவரும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் உடைத்து சென்று பார்த்தபோது மின்விசிறியில் ஜோஸ்னா உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினர். உடனடியாக மகளை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘’ஜோஸ்னா ஏற்கனவே இறந்துவிட்டார்’ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவிக. நகர் போலீசார் சென்று பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் இருந்த ஜோஸ்னாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.