Thursday, July 10, 2025
Home மகளிர்காதோடுதான் பேசுவேன் சிறுகதை – காணாமல் போன கூஜா!

சிறுகதை – காணாமல் போன கூஜா!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

எங்குதான் போயிருக்கும் கூஜா?

நெற்றிப்பொட்டைத் தேய்த்துக் கொண்டு யோசித்தாள் சுமதி, தெரியவில்லை. வீடு பூராவும் தேடிவிட்டாள். காணாமல் போன கூஜா எங்கு தேடியும் இல்லை. அழகான அழுத்தமான ஆப்பிள் கூஜா. ஏெழட்டு பேருக்கு காபி வாங்கலாம். சுமதி அம்மா கல்யாணத்திற்கு பரிசாய் வந்தது. சின்ன ஸ்பூன் காணவில்லை என்றாலும் பதறும் சுமதியின் அம்மாவும் தேடி ஓய்ந்துவிட்டாள். பிள்ளையாருக்குக் காசு முடிந்து வைத்தாள் சுமதி. ஆனாலும் கிடைக்கவில்லை.

அம்மாதான் ஆரம்பித்தாள், “ஒருநாள் மோர் மீந்துவிட்டதால், கூஜா நிறைய ஊற்றி வேலைக்கார அம்மாவிடம் கொடுத்தேன். திரும்பக் கொண்டு வந்தாங்களான்னு தெரியல? நாளைக்குக் கேட்போம்.” என்றாள். “ஏம்மா நான் ப்ளஸ் டூ முடிச்சு, இப்ப கரஸ்லதான படிக்கிறேன். நான்தான் நிறைய நேரம் இருக்கு இந்த வேலைக்கார அம்மா வேணாம், நானே வீட்டு வேலை எல்லாத்தையும் செய்யறேன்னு சொன்னா கேக்குறியா?” என்றாள் சுமதி.

“அது எப்படி சுமதி, நீ ஆறாவது படிக்கும்போது இந்த அம்மா நம்ப வீட்டு வேலைக்கு வந்தாங்க. அவங்களை எப்படி சட்டுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி நிப்பாட்டுறது?” என்று எதிர் கேள்வி
கேட்டாள் அம்மா.“அதுக்காக அவங்களை வச்சிகிட்டேயிருக்கணுமா?, நீ சொன்ன இந்த அம்மாவுக்கு வயசாயிட்டது. முன்னமாதிரி வேலை செய்ய முடியலன்னு. நாளைக்கு நீயே சொல்லி நிறுத்திடு. இல்லன்னா நான் சொல்ல வேண்டி வரும்”, என அலுப்பானக் கோபத்துடன் சுமதி சொன்னாள்.உண்மைதான், முன்னமாதிரி இந்த அம்மாவால் வேலை செய்ய முடியவில்லை. துணிகளில் அழுக்கு அப்படியேயிருக்கு, பாத்திரங்களிலும் அழுக்கு அப்படியேயிருக்கு. இப்படியிருந்தும் ஏன் இந்தம்மாவை தன் அம்மா நிறுத்தவில்லை என்று சுமதிக்குப் புரியவில்லை.

அம்மாவுக்கோ இதுவரைப் பால் கொடுத்த மாட்டை விட மனமில்லை. எப்படியோ இந்த அம்மாள் செய்யுறவரை செய்யட்டும். தானே நின்றால் நிக்கட்டும் என எண்ணினாள்.
மறுநாள் காலையில் வேலைக்கு வந்த அந்தம்மாவிடம் கூஜா பற்றி அம்மா கேட்டாள். வேலைக்கார அம்மாவோ “அன்னைக்கு நீ கொடுத்த மோரை குடிச்சிட்டு கையோடு கழுவி அலமாரியில கவுத்தி வச்சிட்டேம்மா. அதெப்படிக் காணாமல் போகும்… வீடு பூராத் தேடிப் பாரும்மா” என்றாள்.

“நேத்து வீடெல்லாம் தேடியாச்சு, நீ எதுக்கும் உன் வீட்டுலத் தேடிப்பாரு” என அம்மா கூறினாள். “நான் எடுத்துட்டு போலம்மா. நீ எடுத்தேன்னு சொல்லல… மறதியா கொண்டுபோயிருக்கலாமுல்ல. எது காணும்னாலும் உன்னையும் என்னையும் தவிர யார் எடுப்பாங்க. ஒண்ணு உன் வீட்டுல இருக்கணும், இல்ல என் வீட்டுல இருக்கணும். தேடிப்பார், கிடைக்கும்” என்றாள் அம்மா. ஒரு வார்த்தைக் கூட அதற்குமேல் பேசவில்லை.உறை குத்த மோர் வாங்க வந்த பக்கத்து வீட்டு கமலம்மாவிடம் கூஜாக் காணாமல்போன விவரத்தை தெரிவித்தாள் அம்மா. “உங்க வீட்டு வேலைக்காரம்மா ஒரு மாதிரி. அதுதான் எடுத்திருக்கும்” என தூபம் போட்டாள் கமலம்மாள்.

அது கேட்டு சுமதி எண்ணெயில் போட்ட பணியாரமாய்க் குதித்தாள். “அம்மா உனக்குதான் ஒன்னும் தெரியல. அந்தம்மா பாவம் பாவங்கற… நாளைக்கு கூஜா வர்லைன்னா நடக்கறதே வேற” என பொரிந்தாள்.மறுநாள் வேலைக்காரம்மா வெறுங்கையோடு வர… இதுதான் சரியான நேரம் என “கூஜாக் கிடைக்கல?” என்று சுமதிக் கேட்டாள். “இல்லைம்மா நான்தான் நேத்தியே சொன்னேன்ல, இல்லன்னுட்டு” என்றாள். “சொல்லிட்டா காணாமப்போன கூஜா உங்கக்கிட்ட இல்லன்னு ஆயிடுமா?” என மடக்குவது போல் கேட்டாள் சுமதி. “என்ன தாயி இப்படி பேசற. என் மவளாட்டம் நீ, இப்படில்லாம் பேசக்கூடாது. நான் எடுத்தனா இல்லையான்னு, அம்மாவுக்குத் தெரியும்” என அம்மாவின் முகத்தைப் பார்க்க, அம்மாப் பார்வையைத் தாழ்த்தவும் பதறிப்போனாள் வேலைக்காரஅம்மா.

“அம்மாவுக்கு ஒன்னும் தெரியாது. உலகமும் புரியாது. போனாப்போவுது, போனாப்போவுதுன்னு அம்மா மாதிரி விட்டுட்டு நிக்க நானொன்னும் ஏமாளியில்ல. ஒன்னு கூஜாவோட வீட்டுப் படியேறுங்க, இல்ல வெளியப் போங்க” என வாசற்புறம் கைக்காட்டினாள் சுமதி.வேலைக்காரம்மா கண்கள் கலங்க விதிர்விதிர்த்து நடுங்கியபடி முகம் கோண பரிதாபமாக
அழுதவாறு சுமதியை பார்த்தாள்.

“யம்மா, சத்தியமா நான் எடுக்கலம்மா” என
அம்மாவைப் பார்த்துக் கூறியவள்,
கண்களை துடைக்கக்கூட மறந்தபடி
கால்கள் பின்ன வெளியேற்றினாள்.

“நல்ல வேளை இனி எல்லா வேலையும் நாமே செய்து கொள்ளலாம். வீடு, துணி, பாத்திரம் எல்லாம் பளிச்சென்றிருக்கும்” என அம்மாவை எதுவும் நடக்காதது போல் பார்த்தாள் சுமதி. அம்மா
முகம் இருண்டிருந்ததுதான் ஏனென்று புரியவில்லை அவளுக்கு.சாயங்காலம் மழை வருவது போலிருந்ததால் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க ஓடினாள் சுமதி. எல்லாத் துணிகளையும் எடுத்துவிட்டாள் சுமதி. பால்கனியில் பறந்து விழுந்திருந்த கர்ச்சீப்பை எடுக்க பால்கனிப் படியில் இறங்கினாள்.

அங்கே பால்கனி படியோரமாக ஒரு புத்தகத்தை மேலே மறைத்தபடி கூஜா இருக்க, பார்த்த சுமதி “இதெப்படி இங்கே” என யோசித்த போது, முந்தா நாள் காலை பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த தம்பியும் அவன் நண்பனும் தண்ணீர் கேட்க இதை கொண்டு வந்து கொடுத்தது நினைவு வந்தது அவளுக்கு. “அன்றிலிருந்து இது இங்கேயே இருக்கிறதா? இது தெரியாமல் அய்யோ பாவம் வேலைக்காரம்மாவை எப்படி திட்டிவிட்டேன்”, நெஞ்சில் ஏதோ சுருக்கென்று தைத்தது. போகும் போது அந்தம்மா கண்கலங்கி சென்றது ஞாபகத்தில் வந்தது. முதன் முறையாக ஒருத்தர் மீது அபாண்டமாக பழி சுமத்தியதற்காக வருத்தப்பட்டாள் சுமதி.

கூஜாவை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள். மனதில் ஸ்கூல் போகும் போது அந்தம்மாவிடம் தலை பின்னிக் கொள்வதும், கோயிலுக்கு, கடைக்கு என அந்தம்மாவின் கையை பிடித்தபடி சென்றதும் ஞாபகத்தில் வந்தது. ஏன் பெரிய பெண்ணாகி கூட இப்போதும் அம்மா வெளியில சென்றால் வேலைக்காரம்மாதான் துணை.கூஜாவை கையில் பார்த்ததும் அம்மா கோபத்தில் கன்னா பின்னாவென்று கத்தினாள். மறுநாளே ரோட்டில் சென்று கொண்டிருந்த வேலைக்காரம்மாவை கூப்பிட்ட அம்மா, “தப்பா எடுத்துக்காதம்மா உள்ள வந்து பழையபடி வேலையை பாரு” என்று சொல்ல, “கூஜா கிடைச்சிடிச்சாம்மா சத்தியமா நான் எடுக்கலை” என சின்னப் பிள்ளை போல் திரும்பத் திரும்பக் கூறினாள்.

சட்டென வேலைக்காரம்மாவின் காலில் விழுந்த சுமதி, “என்னை மன்னிச்சுடுங்கம்மா. கூஜா கிடைச்சிடுச்சி. இப்பதான் உங்களை சரியா புரிஞ்சுகிட்டேன்” என்று அழுதாள். “பாப்பா எந்திரி. கூஜா மட்டும் கிடைக்கலேன்னா என்னை நம்பமாட்டேல்ல?”, சாட்டையடியாய் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் விழுந்தன.இனி ஏழேழு ஜென்மத்துக்கும் சரியா எடை போடாமல் ஒருவரை பழி சொல்லமாட்டேன் என மனதில் நினைத்துக் கொண்டாள் சுமதி.

தொகுப்பு: சங்கரிகிருஷ்ணா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi