மியுனிச்: ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் அபாரமாக செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஜெர்மனியின் மியுனிச் நகரில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிருக்கான, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர் இறுதிச் சுற்றில் 231.2 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.
இப்போட்டியில் சீனாவை சேர்ந்த வீராங்கனை ஸிபெய் வாங், 252.7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தென் கொரியாவை சேர்ந்த குவோன் யுஞ்சி, 252.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவை சேர்ந்த வருண் தோமர், இறுதிச் சுற்றில், 160.3 புள்ளிகள் பெற்று 6ம் இடத்தை பெற்றார். இதற்கு முன், டோக்கியோ, பாரிஸ் நகரங்களில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறாத இளவேனில் அதன் பின்னர் பெற்ற தொடர் பயிற்சிகளின் காரணமாக, நேற்று நடந்த போட்டியில் துவக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.