Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை: ஆன்மீகப் பொக்கிஷமான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் புகழ்பெற்ற ஆனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் இந்த ஆண்டின் 518-வது ஆனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதியது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்பாளுக்கும் விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இந்த புனிதமான வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கோயிலின் மகா மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை நடத்தினர். யாக குண்டத்தில் போடப்பட்ட ஒவ்வொரு பொருளும் தெய்வீக அதிர்வுகளை எங்கும் பரவச் செய்தது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் பிரதான கொடிமரத்தின் அருகே கொண்டு வரப்பட்டனர். அங்கு, சுவாமிக்கும் அம்பாளுக்கும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தன.

காலை 7.30 மணி நெருங்கியதும், மேள தாளங்கள் விண்ணை எட்ட, பக்தர்களின் பக்தி கோஷம் எங்கும் ஒலித்தது. சரண கோஷங்கள் திசையெங்கும் எதிரொலிக்க, கம்பீரமான நெல்லையப்பர் கோயில் கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமரத்தில் வண்ணமயமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.

கொடியேற்றத்தின் நிறைவாக, சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் கரங்கள் கூப்பிய நிலையில், ``நெல்லையப்பா போற்றி’’, ``காந்திமதி தாயே போற்றி’’ என்ற பக்தி முழக்கமிட்டனர். இந்நிகழ்வில் பங்கேற்க நெல்லை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அடுத்த பத்து நாட்களுக்கு இந்த ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சுவாமி அம்பாள் வீதி உலா, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு வைபவங்கள் நடைபெற உள்ளன.