தஞ்சாவூர்: இந்தியா முழுவதும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் குமரி மட்டிப்பழம், நெல்லை செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சென்னை, உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னியுமான சஞ்சய்காந்தி தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் 450க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 55 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது நெல்லை செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றதில் முதல் இடத்தில் உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவநல்லூர் சவுராஷ்ட்ரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் பரிசோதனைக்கு பின் தற்போது செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்த சேலையின் சிறப்பு அம்சம், இந்த சேலையை அணியும் போது குளிர்காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர். இது திருநாமத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நாமக்கட்டி சப்ளை செய்து வரும் ஒரே கிராமம் ஜடேரிதான். இந்த ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வகையான வாழைப்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதில் நாகர்கோவில் கோட்டத்தில் அதிகளவில் மட்டி வாழைப்பழம் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த இந்த மட்டி வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.