சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்மூலம் பல்கலைக்கழக தேர்வு எழுதுகிற வாய்பையும் இழந்து படிப்பையும் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தனது படிப்பையும், பட்டம் பெறும் வாய்ப்பையும் இழந்த சங்கரய்யாவுக்கு, அதே மதுரை பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட முதல்வர், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என உடனடியாக அறிவித்தார். அதன் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சிண்டிகேட் மற்றும் செனட்டில் தீர்மானம் நிறைவேற்றி நவம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், பட்டமளிக்கும் சான்றிதழில் கையெழுத்திட கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சரின் செய்திக் குறிப்பும் அதனை உறுதி செய்துள்ளது. கடந்த காலங்களில் எந்த விருதுகளையும் மறுத்தே வந்துள்ளார்.
அதே சமயம் தமிழக அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதினை ஏற்றுக் கொண்ட அவர், அரசு அளித்த விருது தொகையான ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். எனவே, அத்தகைய சிறப்பு வாய்ந்தவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதால் அந்த பட்டத்திற்கும், வழங்குகிற பல்கலைக்கழகத்திற்கும் தான் பெருமை கூடும். நீண்ட நெடிய தியாக வாழ்க்கையை கொண்ட சங்கரய்யாவின் அருமை பெருமைகளை உணர்வதற்கான தகுதியே இல்லாதவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும்கவர்னர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் கவர்னர் பொறுப்பை மென்மேலும் சிறுமைப்படுத்தியே வருகிறார். கவர்னரின் இந்த தரக்குறைவான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அநாகரீக செயல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருப்பது அறிவுக்கு பொறுத்தமற்றது. கவர்னரின் பொறுப்புக்கு உகந்த செயலும் அல்ல. அவரின் அநாகரீக செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என கூறியுள்ளார்.