இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வர்த்தக உறவு முழுமையாக முறிந்திருக்கிறது. இதில் பெரிய அளவில் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டு இருப்பது மருந்து சப்ளையில் தான். அங்கு தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு இந்தியாவில் இருந்து தான் மூலப்பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. மேலும் உயிர்காக்கும் மருந்துகள் இந்தியாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது பாகிஸ்தானுக்கு அவை அனுப்பப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இதன்காரணமாக பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் மருத்துவ துறையில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது. சீனா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மருந்துகளை ஒப்பிடும்போது இதர நாடுகளின் மருந்துகள் 10 மடங்கு விலை அதிகம். இதனால் நோயாளிகள் உள்பட பல தரப்பினர் உரிய மருந்துகள் போதுமான விலையில் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.