டெல்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
இதனை தொடர்ந்து 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு பின்பு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணை வரை நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.