மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் சங்ராம் தோப்டே. இவர் புனேவில் உள்ள போர் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். சங்ராமின் தந்தை அனந்த்ராவ் தோப்டே, போர் தொகுதியில் 6 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தவர். போர் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட, சங்ராம் தோப்டே தோல்வியடைந்தார். இந்நிலையில் சங்ராம் தோப்டே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் மற்றும் மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலாவிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த தோப்டே, ஞாயிற்றுக்கிழமை (இன்று) தனது அடுத்த நகர்வை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஆயினும் அவர் பாஜவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே கடந்த சில மாதங்களாக அவர் பாஜ தலைவரான முதல்வர் பட்நவிசுடன் நெருக்கமாக இருந்ததாகவும், அண்மையில் புனேவில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. சங்ராமின் சர்க்கரை ஆலைக்கு உதவுவதாக பாஜ உறுதியளித்ததால் அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பாஜ மற்றும் காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.