லக்னோ: ஐபிஎல் போட்டியில் இன்று லக்னோவில் நடைபெற உள்ள 59வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் களம் காணுகின்றன. இரு அணிகளும் இதுவரை 5 ஐபிஎல் ஆட்டங்களில் மோதி இருக்கின்றன. அவற்றில் லக்னோ 2, பெங்களூர் 3 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன. இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக லக்னோ 213, பெங்களூர் 212 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக பெங்களூர் 153, லக்னோ 108 ரன் அடித்துள்ளன. நடப்புத் தொடரில் முதல் முறையாக இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக களம் கண்ட தலா 5 ஆட்டங்களில் லக்னோ 1-4 என்ற கணக்கிலும், பெங்களூர் 4-1 என்ற கணக்கிலும் வெற்றித், தோல்விகளை பெற்றுள்ளன.
நடப்புத் தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 11 ஆட்டங்களில் விளையாடி இருக்கின்றன.அவற்றில் ரிஷப் பன்ட் தலைமையிலான லக்னோ 5 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்து 10 புள்ளிகளை வசப்படுத்தி உள்ளது. கூடவே ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் 8 வெற்றி, 3 தோல்விகளை பார்த்து 16 புள்ளிகளை பெற்றுள்ளது.
இரு அணிகளும் அடுத்தச் சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன. எனினும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் பெங்களூர் முதல் அணியாக அடுத்தச் சுற்று வாய்ப்பை உறுதிச் செய்யும். லக்னோ கிரிக்கெட் அரங்கில் இந்த 2 அணிகளும் ஒரே ஒரு முறை மட்டுமே மோதி உள்ளன. அதில் பெங்களூர் 18 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.