Wednesday, December 6, 2023
Home » இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

by Neethimaan

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழ்நாட்டு மீனவர்களையும், அபகரிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கை இனவாத அரசினுடைய கடற்படை கடந்த 14.10.2023 அன்று அதிகாலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 27 மீனவர்களை அத்துமீறி கைது செய்திருப்பதோடு, அவர்களது 5 விசைப்படகுகளையும் அபகரித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இனவெறி சிங்கள கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படும் கொடுமைகள் தொடர்ந்து வருவது இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.

தமிழக மீனவர்களின் படகுகளைப் பறித்துக்கொள்வது, வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீனவர்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் ஈவிரக்கமற்ற வன்முறை தாக்குதல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடேயாகும். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளதோடு, 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலே கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது.

இருந்தபோதிலும், இலங்கை ராணுவத்தின் இக்கோரத் தாக்குதல்களுக்கு இதுவரை இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எவ்வித எதிர்வினையும் ஆற்றியதுமில்லை. பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுவதை தவிர, எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப்போக்கினாலேயே தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 27 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி கட்சத்தீவினை மீட்க உறுதியான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?