ராமேஸ்வரம், டிச. 15:ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 377 விசைப்படகுகள் மீன்வளத்துறையின் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் மணிவண்ணன் என்பவரின் விசைப்படகு 2 நாட்டிக்கல் தூரத்தில் சென்றபோது படகின் அடிப்பகுதி பலகை உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்தது. இதில் படகு கடலில் மூழ்க துவங்கியது.
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள், தத்தளித்த 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் மூழ்கிய படகு மீன்பிடி அனுமதி டோக்கன் பெறாமல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.


