தென்காசி: குற்றாலத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சாரல் பெய்து வந்தது. வெயில் சிறிது நேரம் கூட தலை காட்டாத அளவிற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. அருவிகளில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக ஒரு வாரம் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று முன்தினம் தடை விலக்கி கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குற்றாலத்தில் கடந்த 2 தினங்களாக வெயில் காணப்பட்டது. நேற்று மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. ஒரு சில நிமிடங்கள் மெல்லிய சாரல் பெய்தது. இரண்டு தினங்களாக வெயில் அடித்த போதும் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.
பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.