ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்கு பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான். பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து உடல் தகுதி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று ராணுவத்தில் சேர்வது ஒரு விதம். சிறு வயதிலேயே ராணுவப் பள்ளியில் சேர்ந்து படித்து ராணுவத்தில் பணியாற்றுவது இன்னொருவிதம். சிறு வயதிலேயே தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பள்ளிகளில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளியும் ஒன்றாக இருக்கிறது. இங்கு 6 மற்றும் 9ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும்.
தகுதி : இப்பள்ளியில் மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும். 6ம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரம்பு தகுதியும் இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு: இப்பள்ளியில் காலியாக இருக்கும் இடங்களில் எஸ்சி பிரிவினர் 15%, எஸ்டி பிரிவினர் 7.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டும். இந்த ஒதுக்கீட்டு இடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் 67% இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 33% இடங்கள் பிற மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேர்ச்சித் தரப்பட்டியலின்படி வழங்கப்படும். மேற்காணும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் 25% முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேடு ஆகியவை < https://aissee.nta.nic.in > என்ற இணையதளத்தில் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பை பெற விரும்புபவர்கள் “முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர் -642102, உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்”எனும் முகவரிக்கு அமராவதி நகரிலிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் பொதுப்பிரிவினர், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை வங்கி வரைவோலையைப் பெற்று வேண்டுகோள் கடிதம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு: இப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு நடைபெறும். 6ம் வகுப்புக்கு அமராவதி நகர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும், 9ம் வகுப்புக்கு உடுமலைப்பேட்டை, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் நடைபெறும்.
மாணவர் சேர்க்கை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் மேற்காணும் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்பள்ளிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படிப்புக்கான சேர்க்கை குறித்து மேலும் விவரங்களை அறிய http://sainikschoolamaravathinagar.edu.in எனும் பள்ளியின் இணையதளத்தைப் பார்வையிடலாம்.