Friday, June 20, 2025
Home செய்திகள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு விழுப்புரம் மாவட்டத்தில் 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பிவைப்பு

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு விழுப்புரம் மாவட்டத்தில் 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பிவைப்பு

by Lakshmipathi

*முதல்நாளே வழங்க ஏற்பாடு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 3 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் 2ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதனையொட்டி மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா சீருடைகள் மாவட்டந்தோறும் அனுப்பிவைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பிவருகின்றனர்.

அதன்படி தமிழ்நாடு அரசு பாடநூல்கழகத்தின் மூலம் சென்னை, ஒடிசா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அச்சடிக்கப்பட்ட இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பள்ளிகள் திறக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 1,208 அரசு பள்ளிகளும், 17 நகராட்சி பள்ளிகளும், 65 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளும், 199 நிதி உதவி பெறும் பள்ளிகளும், 23 பகுதிநேர நிதி உதவி பெறும் பள்ளிகளும் ஆக மொத்தம் 1,512 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 2ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் தொடங்கியதும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

இதற்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகத்தின் மூலம் சென்னை, ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அச்சகத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் சென்னையில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன.

இந்த லாரிகள் விழுப்புரத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு வந்து, அங்குள்ள குடோன்களில் விலையில்லா பாடப்புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இங்கிருந்து விழுப்புரம், திண்டிவனம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பபட்டன.

விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டு நேற்று முதல் கல்விமாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. பள்ளி திறந்த முதல்நாளே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படஉள்ளன.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi