திருத்தணி: பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் அட்டகாசம் செய்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி அருகே சிவாடா, நெமிலி, தாழவேடு, வேலஞ்சேரி போன்ற கிராமப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சிவாடா பகுதியிலிருந்து திருத்தணிக்குச் சென்ற அரசுப் பேருந்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதன் முன் பகுதியில் வாழைமரம் கட்டப்பட்டதையடுத்து, மேள தாளங்களுடன் ஆயுத பூஜை என்ற பெயரில் சில மாணவர்கள் பேருந்தில் அட்டகாசம் செய்தனர். பின்னர் பேருந்தின் பின்புறத்தில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு தரையில் கால்களை தேய்த்தபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர். திருத்தணியில் இப்படி அரசுப் பேருந்தில் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன் உடனடியாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.