டெல்லி: பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகை குறைப்புக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை இளைஞர்களின் உதவித்தொகையை பாஜக அரசு திட்டமிட்டு குறைத்து வருகிறது.
இந்த வெட்கக்கேடான அரசாங்க புள்ளிவிவரங்கள், மோடி அரசாங்கம் அனைத்து உதவித்தொகைகளிலும் பயனாளிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய குறைப்புகளைச் செய்துள்ளது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் சராசரியாக 25% குறைவான நிதியையும் செலவிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. உதவித் தொகை குறைப்பால் இளைஞர்களின் கல்வி வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து, அவர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்படாவிட்டால், நம் நாட்டின் இளைஞர்களுக்கு எவ்வாறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“அனைவருக்குமான வளர்ச்சி” என்ற உங்கள் முழக்கம் ஒவ்வொரு நாளும் பலவீனமான பிரிவுகளின் விருப்பங்களை கேலி செய்கிறது! என பதிவிட்டுள்ளார்.