புதுடெல்லி: இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போலி வலைதளங்கள், ஏமாற்றும் சமூக ஊடக பக்கங்கள், பேஸ்புக் பதிவுகள், கூகுள் போன்ற தேடுபொறிகளில் பணம் செலுத்திய விளம்பரங்கள் மூலம் ஆன்லைன் முன்பதிவு மோசடிகள் நடக்கின்றன. கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் முன்பதிவுகள், சார்தாம் யாத்ரீகர்களுக்கான விருந்தினர் மாளிகை, ஓட்டல் முன்பதிவுகள், ஆன்லைன் கேப், டாக்சி முன்பதிவு, மதச் சுற்றுலாக்கள் ஆகியவற்றில் மோசடிகள் அதிகரிக்கின்றன. எனவே, சுற்றுலாபயணிகள், பக்தர்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தும் முன்பாக வலைதளங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.
கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் ஸ்பான்சர் செய்யப்பட்ட அல்லது தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கு முன் சரிபார்க்கவும். மேலும் அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் அல்லது நம்பகமான பயண நிறுவனங்கள் மூலம் மட்டுமே முன்பதிவுகளை செய்யவும். ஏதேனும் மோசடி நடந்தால் cybercrime.gov.i* இல் உள்ள தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் இணையதளத்தில் புகாரளிக்கவும் அல்லது 1930 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.