சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ஆண்டவர் நகர் பகுதியில் மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள ஆண்டவர் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசி கடத்தல் நடைபெறுவதாக சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மொபட்டில் சாக்கு மூட்டைகளுடன் சென்ற நபரை பிடித்து விசாரித்த போது பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மணிகண்டன் (27) என்பதும், அப்பகுதியில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்க கடத்தி சென்றதும், தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 கிலோ ரேஷன் அரிசி என மொத்தம் 350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டனை கைது செய்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.