சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சரக்கு லாரிகளை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே இன்று காலை தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை புளிஞ்சூர் சோதனை சாவடி அருகே சரக்கு லாரிகளை வழிமறித்து நின்றது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். இதற்கிடையே அந்த காட்டு யானை தனது தும்பிக்கையால் லாரிகளில் கரும்பு உள்ளதா என தேடியபடி அங்கும் இங்கும் அலைந்ததோடு ஒரு லாரியை தும்பிக்கையால் தட்டி தட்டி பார்த்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். சுமார் அரை மணி நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதை தொடர்ந்து சரக்கு லாரிகள் புறப்பட்டு சென்றன.