சென்னை: சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட ‘பிஎஸ்எல்வி சி-56’ ராக்கெட் இன்று ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று காலை 6.30 மணிக்கு முதல் ஏவுதளத்தில் இருந்து ‘பிஎஸ்எல்வி சி-56’ ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
இந்த ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோள் டிஎஸ்டிஏ (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் 23 கிலோ எடை கொண்ட ‘விகிலேக்ஸ்- ஏஎம்’ என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், ‘ஆர்கேட்’ என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், ‘என்யுஎல்ஐஒஎன்’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், ‘ஸ்கூப்-2’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் ஆகிய 6 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இந்த ‘டிஎஸ்- சாட்’ செயற்கைக்கோள் ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. எனவே அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும்.