தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே தினசரி காய்கறி சந்தை சுமார் 8 மாதமாக நடைபெற்று வந்தது. தனியார் இடத்தில் இயங்கிவந்த இந்த காய்கறி சந்தை முறையான அனுமதி பெறாமல் நடந்து வருவதாக அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்று அதிகாலையில் தினசரி காய்கறி சந்தைக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது வியாபாரிகள் மற்றும் இட உரிமையாளர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் காய்கறி சந்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தனியார் சந்தைக்கு காய்கறிகளை கொண்டுவந்த விவசாயிகள் அதனை விற்க முடியாமல் போனதால் மனவேதனையில், தாங்கள் கொண்டுவந்த காய்கறிகளை சாலையில் கொட்டி சென்றனர். இதனால் சங்கரன்கோவில் – திருவேங்கடம் சாலையில் பரபரப்பு நிலவியது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.