Thursday, April 25, 2024
Home » சஞ்சுசாம்சன், கெட்மயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி; எங்களுடைய பந்துவீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை: குஜராத் கேப்டன் ஹர்திக் பேட்டி

சஞ்சுசாம்சன், கெட்மயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி; எங்களுடைய பந்துவீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை: குஜராத் கேப்டன் ஹர்திக் பேட்டி

by Suresh

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 23வது லீக் போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன், ஷுப்மன் கில் 45 ரன், அபினவ் மனோஹர் 27 ரன், டேவிட் மில்லர் 46 ரன்னில் அவுட்டாகினர். இறுதியில், குஜராத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் சேர்த்தது. 178 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 4 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட் இழந்தது. இருப்பினும் சஞ்சு சாம்சன், சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ஷிம்ரன் ஹெட்மயர் 56 ரன் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். தேவ்தத் படிக்கல் 26 ரன், துருவ் 18 ரன், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ரன், ஆகியோரின் பங்களிப்புடன் 19.2 ஓவரில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து வெற்றிபெற்றது. குஜராத் அணி சார்பில், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தோல்வி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “டி20 கிரிக்கெட்டின் அழகே இதுதான் போட்டி எப்போதுமே முடிவடைந்துவிடாது. இதைதான் நான் என் அணி வீரர்களுக்கு பாடமாக சொல்ல விரும்புகிறேன். கடைசி பந்து முடியும் வரை ஆட்டம் முடிந்துவிடாது. இதை அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். சுழற்பந்துவீச்சாளர் நூரை, நான் இம்பாக்ட் வீரராக எடுத்ததற்கு காரணம் அவர் நன்றாக பந்து வீசுகிறார் என்பதால் தான். அவரை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். இன்றைய ஆட்டத்தில் நூர் ரன்களை கொடுத்திருக்கலாம்.

இதற்காக நான் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்க விரும்பவில்லை. எங்களுக்கு முக்கிய விக்கெட்டை நூர் எடுத்துக் கொடுத்தார். இதை தான் அவரிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். எங்களுடைய மற்ற பந்துவீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. இது மிகப்பெரிய நெடுந்தொடர். நாம் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணியாக இருந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பதை இந்த தோல்வி எங்களுக்கு உணர்த்துகிறது. இன்னும் எங்களுக்கு நிறைய ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. நாங்கள் இன்னும் நிறைய நல்ல கிரிக்கெட்டுகளை விளையாடுவோம். நான் முதல் பாதி முடிந்த பிறகு 10 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம் என நினைத்தேன் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் இன்னும் கடும் நெருக்கடியை கொடுத்து இருக்க வேண்டும்’’ என்றார்.

You may also like

Leave a Comment

fourteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi