கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் செயல்பட்ட இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மாதிரிவேளூர், பாலுரான்படுகை, பட்டியமேடு ஆகிய இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசின் மணல் குவாரி செயல்பட்டது. இங்கு அள்ளப்படும் மணல் குன்னம் என்ற இடத்தில் உள்ள கிடங்கில் குவிக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இங்கு விதிமுறையை மீறி மணல் விநியோகம் செய்ததாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மூன்று இடங்களில் செயல்பட்ட குவாரி பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த சோதனையில் மணல் எடுக்கப்பட்ட இடம், அதன் பரப்பளவு ஆழம் ஆகியவை குறித்து அளவீடு செய்தனர்.