சென்னை: மணல் குவாரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கருர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. குறிப்பாக மணல் குவாரிகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆற்று மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.
இந்த சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையானது நீர்வளத்துறை முதன்மை பொறிலாளர் முத்தையாவுக்கு சம்மன் அனுப்பியது. மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தய்யா ஆவணங்களுடன் ஆஜராகியுள்ளார்.
அவரிடம் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளப்பட்டதா? பர்மிட் இல்லாத இடங்களில் மணல் எடுக்கப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல்வேறு அதிகாரிகள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.