தமிழக சட்டப் பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்ைக மீதான விவாத்தில் கலந்து கொண்டு முசிறி தியாகராஜன் (திமுக) பேசுகையில், உதயநிதி ஒற்றைத் தலை மனிதர் அல்ல, பத்து தலை கொண்ட ராவண வம்சம், சனாதன அழுக்கை வெளுக்க வந்த சூரிய குமாரன். உங்கள் வாள்களையெல்லாம் நேர்கொள்ளும் அரசியல் மார்பு அவருடையது. திராவிட இனத்தின் தலைமை தளபதி. திராவிட பாசறையில் பிறந்த ஆயுதம்.
அமைச்சர் துரைமுருகன்: உறுப்பினர் கவிதை நடையிலே படிக்கிறார், படிக்கட்டும். (இந்த நேரத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டார். அவர் பேச துணை சபாநாயகர் அனுமதி வழங்கினார்).
கே.பி.முனுசாமி (அதிமுக): துணை முதல்வரை ராவண வம்சம் என்று சொன்னார், மகிழ்ச்சி. அதற்கடுத்ததாக சனாதன தர்மம் என்று சொன்னார். ராவணன் இறை பக்தி உடையவன். எனவே உறுப்பினர் சொன்ன அந்த கருத்து ஏற்புடையதாக இல்லை.
அமைச்சர் சேகர்பாபு: சனாதனம் என்பதும், இறை வழிபாடு என்பதும் ஒரு வாழைப் பழம் போன்றது. பழம் இறைவன் என்றால், சனாதானம் என்பது தோல்.
கே.பி. முனுசாமி: முற்றிலும் தவறானது. இவை இரண்டும் ஒன்று என்று சொன்னால், சனாதனத்திற்கு இவ்வளவு பெரிய போராட்டம் தேவையில்லை, சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்): அதில் வர்ணாச்ரம கோட்பாடு இல்லை. வர்ணாச்ரம கோட்பாடு வந்து, அதை கபளீகரம் செய்தபிறகு தான், அது சனாதன வடிவத்திற்கு ஆளாகிறது. ஆகவே, தமிழர்களின் மெய்யியல் மரபிற்கும், சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.