வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் இந்திய துணை தூதரகத்தின் மீது கடந்த 2ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்கவாழ் இந்தியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “பேச்சு சுதந்திரம் என்பது வன்முறைகளை தூண்டுவது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது அல்ல. இந்திய தூதர் சரன்ஜித் சிங் சந்து உள்பட இந்திய தூதர்களை குறி வைத்து சமூகவலை தளங்களில் பரப்பப்படும் கருத்துகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய துணை தூதரகம் மீது தீ வைத்தவர்கள் மீதும், அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.