புதுடெல்லி: ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஒரே பாலின ஜோடி ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களில் உள்ள ஒரே பாலின திருமண வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.
அந்த மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்தது.
விசாரணையின் போது,ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஒன்றிய அரசு தனது பிரமாண பத்திரத்தில், ஒரே பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்து போகாது. ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கக்கூடாது. இது தொடர்பாக 7 மாநிலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளன.ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் மாநிலங்கள் இதை எதிர்த்துள்ளன என குறிப்பிட்டுள்ளது. பின்னர் உச்சநீதிமன்றம் தனது இறுதி உத்தரவை கடந்த மே 11ம் தேதி ஒத்திவைத்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.