சென்னை: சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ நிர்வாகம் சமர்பித்துள்ளது. சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சி, நெல்லை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. அந்த வகையில் திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் மெட்ரோ ரயில் இயக்குனர் சித்திக் நேற்று சமர்பித்தார்.
திருச்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் வழித்தடத்தில் 19 நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2ம் வழித்தடத்தில் 26 நிலையங்கள் என மொத்தம் 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு 45 நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் வழித்தடத்தில் 13 நிலையங்களும், பாளையங்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2ம் வழித்தடத்தில் 12 நிலையங்களும், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3ம் வழித்தடத்தில் 15 நிலையங்கள் என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கிலோ மீட்டர் நீளத்திற்கு 40 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் வரை 17.16 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் வழித்தடத்தில் 19 நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2ம் வழித்தடத்தில் 19 நிலையங்கள் என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு 38 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.