Saturday, July 12, 2025
Home ஆன்மிகம் சேலம் கஞ்சமலை பாலமுருகன் கோயில்

சேலம் கஞ்சமலை பாலமுருகன் கோயில்

by Lavanya


கோயில் என்னும் பெரிய யந்திரமானது மனிதர்களின் சிறிய யந்திரங்களோடு தொடர்புகொள்ளும் இடமே கோயிலாகும். நமக்குத்தேவையான யந்திரங்களோடு அதாவது, கோயிலோடு நாம் தொடர்பு கொள்ளும் தருணத்தில் நமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்பதே ஜோதிடத்தின் தாத்பர்யமாகும். இதுவே கிரகங்களே தெய்வங்கள் என்ற சூட்சுமமாகும்…காலாங்கி சித்தரும் அவருடைய குரு திருமூலரும் மலையில் முலிகை தேடி அலைந்து கஞ்சமலைக்கு வந்தனர். திருமூலர் தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்க சொல்லிவிட்டு, மூலிகையை தேடி காட்டிற்குள் சென்றார். அப்பொழுது, அரிசி வெந்துகொண்டிருந்த பொழுது, அதைக் கிளற அருகிலுள்ள செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அச்சமயம் வெந்திருந்த சாதம் கறுப்பாகி விட்டது.

காலங்கி “ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே” என்ற பயத்தில் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனை போல் மாறினார். தன்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். அந்த நேரம், திரும்பி வந்த திருமூலர் தன் சீடனைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அங்கு நின்று கொண்டிருந்த காலாங்கியை பார்த்து என் சீடனை காணவில்லை என அங்கிருந்த காலாங்கியை பார்த்துக் கேட்டுள்ளார். உடனே காலாங்கி “குருவே”, என காலில் விழுந்தார். திருமூலர் ஆச்சர்யத்தால் தாங்கவில்லை, நான் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டாயே. உடனே, காலாங்கி தொண்டைகுழிக்குள் விரலைவிட்டு வாந்தி எடுத்தார். காலாங்கி எடுத்த வாந்தியை அப்படியே சாப்பிட்டார். திருமூலரும் இளைஞராகிவிட்டார்.இதனால்தான் கஞ்சமலை இருக்கும் இடத்திற்கு ‘இளம்பிள்ளை’ என்ற பெயர் உண்டு.

காலாங்கி சித்தரும் மக்களுக்குச் சேவை செய்து அங்கேயே தங்கிவிட்டார். ஒரு கட்டத்தில் தவமிருந்து இரும்புகல் தாதுவாகவே மாறினார். இவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் ஈஸ்வரப்பட்டம் கொடுத்து “சித்தேஸ்வரர்” என மாற்றினார். இங்குள்ள குரு, சித்தர்கள் உள்ளதால் தொடர்புகள் உள்ளது. மேலும், பாலமுருகன் தெய்வத்திற்குச்செவ்வாய், கேது, சனி, சந்திரன், சுக்ரன், குரு ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளது.

*பௌர்ணமி நாளில் இரவு தங்கி வழிபட்டு வந்தால் எப்படிப்பட்ட நோயும் குணமாகும்.
* தைப்பூச நாளிலும் பூச நட்சத்திர நாளிலும் எள்ளுருண்டையும் வெள்ளை மொச்சையும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து வரும் பக்தர்களுக்கு கொடுத்தால் வளமான வாழ்க்கை உண்டாகும் ஐஸ்வர்யம் கைகூடும்.
*அமாவாசை நாளில் நள்ளிரவு மலையில் தங்கி சுவாமியை வழிபட்டு சித்தர்களை மனமுருகி தியானித்தால் செய்வினைக் கோளாறுகள், பில்லி சூனியம், ஏவல் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
*மூல நட்சத்திர நாளில் கொண்டைக் கடலையும் சுவாமிக்கு வெண்பட்டு வஸ்திரம் கொடுத்து வழிபட்டால் சொத்து பிரச்னைகளுக்கு தீர்வுகள் உண்டாகும். புதிய நிலம் வாங்க வாய்ப்புகள் உண்டாகும்.
*ரேவதி நட்சத்திர நாளில் வல்லாரைக் கீரையில் துவரை சுண்டல் நெய்வேத்தியம் கொடுத்து பச்சை வஸ்திரம் கொடுத்து வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ஞாபக சக்தி அதிகமாகும். பிஎச்டி படிப்பவர்கள் நேர்த்தியாக முடிப்பார்கள்.
*சரும நோய் உள்ளவர்கள் பொன்னி ஓடையில் நீராடி சனிக்கிழமை வழிபட்டு எள்ளுருண்டை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தால் சருமநோய் குணமாகும்.
*லக்னத்தில் சனி இருப்பவர்கள் பத்தில் சனி இருப்பவர்கள், பௌர்ணமி / புனர்பூசம் நட்சத்திர நாளில் சித்தர்களை தரிசனம் செய்து சுவாமியை தரிசனம் செய்து ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் அளித்தால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
*ஏகாதசி திதியில் வழிபட்டு நெல்லிச் செடியை வாங்கி வீட்டில் ஈசானி முலையில் நட்டு வளர்த்தால் குபேர சம்பத்து உண்டாகும். எண்ணற்ற முலிகைகளும் ரகசியங்களை உள்ளடக்கியது கஞ்சமலை திருத்தலம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi