ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2ம் சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியின் ரோம் நகரில், இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் 1ம் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியா போடபோவா மோதினர்.
இந்த போட்டியில் சபலென்கா அடித்த சர்வீஸ்கள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக விழுந்தன. அவரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போடபோவா திணறினார். கடைசியில், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற சபலென்கா, 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா அன்னா கெனின், ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியா பால்யுசென்கோவா மோதினர். இந்த போட்டியின் துவக்கம் முதல் அபாரமாக ஆடிய கெனின், 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.