ஸ்ட்ராஸ்பர்க்: ஸ்ட்ராஸ்பர்க் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் ஸ்ட்ராஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் பங்கு பெறும் இப்போட்டிகளின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு, ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தான் நாட்டில் வசித்து வரும் எலனா ஆண்ட்ரெயெவ்னா ரைபாகினா, ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா டிமிட்ரீவ்னா சாம்சனோவா தகுதி பெற்றனர்.
இவர்கள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில் முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ரைபாகினா, டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட்டை போராடி இழந்தார். இருப்பினும் 3வது செட்டை எளிதில் அவர் வசப்படுத்தினார். அதனால், 6-1, 6-7 (7-2), 6-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு, 500 புள்ளிகளும், ரூ.1.36 கோடி பரிசுத் தொகையும் கிடைத்தது.