
கீவ்: ரஷ்யா உடனான போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி ஒன்றை உக்ரைன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்யா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது.
இதனை மறுத்த ரஷ்யா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக கூறியது. இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் ரஷ்ய அதிபர் புதினுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க ரியூனைட் உக்ரைன் என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க புதிய செயலி உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.